ரஞ்சனின் குரல் பதிவுகளை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 09-01-2020 | 7:28 PM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெறுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் தொடர்பில், கொழும்பு குற்றவியல் பிரிவு இன்று மீண்டும் நுகேகொடை மேலதிக நீதவான் H.U.K. பெல்பொலவிற்கு விளக்கமளித்தது. சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் குறித்த குரல் பதிவுகள் பகிரப்படுவதால், அவை பிரதியிடப்பட்ட விதம் இதற்காக பயன்படுத்தப்பட்ட கணினிகள் மற்றும் வன்பொருட்கள் தொடர்பில் அறிக்கை பெற வேண்டியுள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்துள்ளனர். இதற்கமைய, பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட குரல் பதிவுகள், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து பகுப்பாய்வு அறிக்கை பெறுவதற்கு மேலதிக நீதவான் அனுமதியளித்துள்ளார்.