மொரட்டுவை பல்கலைக்கழக பீடாதிபதிக்கு பிடியாணை

மொரட்டுவை பல்கலைக்கழக கணினி பீடாதிபதிக்கு பிடியாணை

by Staff Writer 09-01-2020 | 6:56 PM
Colombo (News 1st) மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி பீடாதிபதிக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை பொருட்படுத்தாமை காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்து இருவர் உயிரிழந்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் குறித்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. பகுப்பாய்வு அறிக்கையை பொலிசாருக்கு சமர்ப்பிக்காமையால் நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது. விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுபடுத்துவதற்காக கணினி பிரிவின் பீடாதிபதியை மன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற அழைப்பாணையை பொருட்படுத்தாததன் காரணமாக பீடாதிபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் சந்தேகநபர் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காமை காரணமாகவும், கைது செய்யப்பட்டுள்ள ஆண் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யாமை காரணமாகவும் அவர்கள் விளக்கமறியலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர்