விடைத்தாள் மதிப்பீட்டிற்காக 27 பாடசாலைகள் மூடல்

விடைத்தாள் மதிப்பீட்டிற்காக 27 பாடசாலைகள் முழுமையாகவும் பகுதியளவிலும் மூடப்படவுள்ளன

by Staff Writer 08-01-2020 | 5:59 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மதிப்பீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 27 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பாடசாலைகள் இந்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்படவுள்ளன. மாத்தறை - மஹாமாயா மகளிர் பாடசாலை, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி மற்றும் குருணாகல் - மல்லவபிட்டிய C.W.W. கன்னங்கர பாடசாலை ஆகியன முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளன. இது தொடர்பிலான ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 9000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அமர்வு எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி அமர்வில் பிரதான மதிப்பீட்டாளர்கள் 600 பேர் பங்கேற்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.