பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையான் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

by Staff Writer 08-01-2020 | 7:00 PM
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று (08) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி M.Y.M. இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் M. கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இன்று சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை விடுக்கப்பட்டால் மாத்திரம் சாட்சியமளிக்க வருகை தருமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.