8 பேர் பலியான பசறை பஸ் விபத்திற்கு காரணம் என்ன?

by Staff Writer 07-01-2020 | 9:20 PM
Colombo (News 1st) பதுளை - பசறை, மடுல்சீம வீதியின் 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களமும் பொலிஸாரும் ஒன்றிணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் இன்று மாலை வரை பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்டின் செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் 41 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (06) மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. மாலை 4.30 அளவில் பசறை - ஏகிரிய பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த NA 2662 இலக்கத்தகடுடைய பஸ் இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளது. இதன்போது, பஸ்ஸிற்கு நேரெதிராக மடுல்சீமயிலிருந்து வருகை தந்த லொறியும் பஸ்ஸும் ஒன்றாக பயணிக்க முற்படுகையில் விபத்து சம்பவித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். விபத்தில் 150 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்தது. இந்த விபத்து இடம்பெறுவதற்கு முன்தினம் பஸ் வண்டி பழுதுபார்க்கப்பட்டமைக்கான ஆவணம் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கிடைக்கப் பெற்றது. எனினும், விபத்தின் போது வாகனத்தின் முன்பகுதி கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இதே வீதியில் இரண்டாம் கட்டைப் பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் 37 பேர் காயமடைந்தனர்.