12 பேருக்கு 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஏப்ரல் 21 தாக்குதல்: கைதான 12 பேருக்கு 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

by Bella Dalima 07-01-2020 | 3:53 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் கடந்த சில வாரங்களில் சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக 3 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில், தடுப்புக்காவல் நிறைவடைந்துள்ளதாக சந்தேகநபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் அறிவித்தார். பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக சந்தேகநபர்கள் அனைவரினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் உத்தரவே நீடிக்கப்பட்டுள்ளது.