by Staff Writer 07-01-2020 | 9:41 AM
Colombo (News 1st) ஈராக்கிலிருந்து தமது படையினரை வௌியேற்றுவதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ தளபதியின் கடிதமொன்றுக்கு பதலளிக்கும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இதனை அறிவித்துள்ளார்.
ஈராக்கில் இருந்து அந்நியப் படைகள் வெளியேற வேண்டும் என ஈராக்கிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க படையினர் மீண்டும் தாயகம் திரும்பலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் ஈராக்கிலிருந்து அமெரிக்க படையினரை வௌியேற்றும் எண்ணமில்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க இராணுவத்தினர் சட்டங்களை மீறவில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார்.
ஈரானிய புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சொலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே காசெம் சொலேமானீ கொல்லப்பட்டார்.
இதற்கு தக்கபதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.