by Staff Writer 06-01-2020 | 2:59 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாகக் கடமையாற்றிய துசித திலும் குமாரவை கொழும்பு மேலதிக நீதவான் இன்று (06) பிணையில் விடுவித்துள்ளார்
தலா 2,50,000 ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் சந்தேகநபரை விடுவித்து மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
எனினும், மாதாந்த இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர் 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பிலான தகவல்களை மறைத்தமை, சாரதியை மாற்றியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இரண்டாவது சந்தேகநபராவார்.
இந்த விடயம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் பெரும்பாலானோரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்வதற்கான தேவையுள்ளதாலும் சந்தேகநபரை விடுவிக்கும் பட்சத்தில் அது விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைகளைத் தவிர்த்து மறைந்திருந்த குறித்த சந்தேகநபர், வழக்கிற்கு முன்தினமே 2 சட்டத்தரணிகளால் மன்றுக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அதிகாரமுடைய ஒருவர் அல்லது சட்டத்தரணிகள் குறித்த சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம் என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.