பல்கலைக்கழக வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

பல்கலைக்கழக வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தத் தீர்மானம்

by Staff Writer 06-01-2020 | 3:32 PM
Colombo (News 1st) இந்திய நகரங்கள் பலவற்றிலுள்ள மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பதற்குத் தயாராகியுள்ளனர். இந்தியத் தலைநகர் டில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இனந்தெரியாத கும்பலால் நேற்றிரவு தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முகமூடி அணிந்த நபர்கள் பொல்லுகள் கொண்டு நடத்திய தாக்குதலில் காயமடைந்த சுமார் 40 மாணவர்களும் விரிவுரையாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறைச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தாக்குதல் நடத்திய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் இடம்பெற்ற இந்த வன்முறையைக் கண்டித்து, மும்பை, ​ஹைதராபாத் உள்ளிட்ட சில நகரங்களில் மாணவர்கள் ஏற்கனவே வீதிகளில் இறங்கி போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில், பாரதீய ஜனதாக் கட்சியுடன் தொடர்புடைய வலதுசாரி மாணவர் அமைப்பான அஹில் பாரதீய வித்யார்த்தி பரிஷத்தை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கண்டித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.