குரோஷிய ஜனாதிபதி தேர்தலில் ஸோரன் மிலனோவிக் வெற்றி

குரோஷிய ஜனாதிபதித் தேர்தலில் ஸோரன் மிலனோவிக் வெற்றி

by Staff Writer 06-01-2020 | 10:00 PM
Colombo (News 1st) குரோஷிய ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் ஸோரன் மிலனோவிக் (Zoran Milanovic) வெற்றி பெற்றுள்ளார். பதவியிலிருந்த ஜனாதிபதி கொலின்டா கிரபர் கிட்டரோவிக்கைத் தோற்கடித்து ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இடதுசாரி வேட்பாளர் ஸோரன் மிலனோவிக் 53 சதவீத வாக்குகளையும் தேசியவாத வேட்பாளர் கொலின்டா கிரபர் கிட்டரோவிக் 47 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். தமது வெற்றியானது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸோரன் மிலனோவிக் தெரிவித்துள்ளார். வௌிவிவகாரக் கொள்கைகளிலும், நாட்டின் பாதுகாப்பு விடயங்களிலும் ஜனாதிபதி ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில், பிரதமரே நாட்டை ஆட்சி செய்வதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. குரோஷிய மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தாது, ஆட்சி செய்வதே தமது இலக்கு எனவும், அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டிய தருணம் இது எனவும் 53 வயதுடைய ஜனாதிபதி மிலனோவிக் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள ஊழலைக்கட்டுப்படுத்துவதாக பிரசாரத்தின் போது மிலனோவிக் உறுதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.