சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாட தீர்மானம்

சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாட தீர்மானம்; பேரணிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம்

by Staff Writer 04-01-2020 | 4:09 PM
Colombo (News 1st) 'பாதுகாப்பான தேசம் - வளமான நாடு' எனும் தொனிப்பொருளில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடத்தப்படும் தேசிய தினத்தை முன்னிட்டு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சின் உப குழு அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய தின நிகழ்விற்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (03) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை பேரணிகளின் எண்ணிக்கையை 30 வீதமாகக் குறைப்பது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கும் அதே தருணத்தில் மரக்கன்றொன்றை நடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி, சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வாகன போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.