அவுஸ்திரேலியாவில் உக்கிரமடையும் காட்டுத்தீ

அவுஸ்திரேலியாவில் உக்கிரமடையும் காட்டுத்தீ: வனவிலங்குகள் பாரியளவில் பாதிப்பு

by Bella Dalima 04-01-2020 | 5:11 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர். வனவிலங்குகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவியுள்ள பிராந்தியங்களிலிருந்து வௌியேறுமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வார இறுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவலடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் 40 பாகை செல்சியஸுக்கும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காற்று அதிகரித்த வேகத்தில் வீசுமெனவும் இதனால் காட்டுத்தீ மேலும் உக்கிரமடையுமெனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நாடளாவிய ரீதியில் காட்டுத்தீ பரவலடைவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவி புரிவதற்காக 3000 மேலதிக துருப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ அனர்த்தமானது புதிய மட்டத்தில் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தண்ணீர் வீசும் விமானங்கள் நான்கை குத்தகைக்குப் பெறுவதற்காக 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.