ஹப்புத்தளை விமான விபத்தில் நால்வர் பலி

ஹப்புத்தளை விமான விபத்தில் நால்வர் பலி; ஆராய குழு நியமனம்

by Staff Writer 03-01-2020 | 3:12 PM
Colombo (News 1st) ஹப்புத்தளை - தம்பபிள்ளை மாவத்தை, ஐஸ்பீலி பகுதியில் இலங்கை விமானப்படைக்குரிய விமானமொன்று விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட Y12 ரக விமானமே விபத்திற்குள்ளாகியதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இருவர் விமானிகள் எனவும் ஏனைய இருவரும் கண்காணிப்பாளர்கள் எனவும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தீக்கிரையாகியுள்ளதாக ஹப்புத்தளை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். விமான விபத்து இடம்பெற்ற இடத்திலுள்ள வீட்டில் வசித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹப்புத்தளை விமான விபத்து தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.