மார்னஸின் அதிரடி ஆட்டத்தால் வலுவான நிலையில் ஆஸி

மார்னஸின் அதிரடி ஆட்டத்தால் வலுவான நிலையில் அவுஸ்திரேலியா

by Staff Writer 03-01-2020 | 9:11 PM
Colombo (News 1st) மார்னஸ் லபுசேனின் சதத்தின் மூலம் நியூஸிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா வலுவாக ஆரம்பித்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சுகவீனம் காரணமாக நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் உள்ளிட்ட 5 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் நியூஸிலாந்து அணியின் தலைவராக டொம் லதம் செயற்படுகிறார். சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். டேவிட் வானர் மற்றும் ஜோ பேர்ன்ஸ் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியது. 39 ஓட்டங்கள் பகிரப்பட்ட போது டொரி பேர்ன்ஸ் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேவிட் வானர் 45 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும், மார்னஸ் லபுசேன் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி 156 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது. சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மார்னஸ் லபுசேன் தனது நான்காவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். 23 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்த ஸ்டீவன் ஸ்மித் 63 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பந்து வீச்சில் கொலின் டி கிராண்ட்ஹோம் 2 விக்கெட்களை கைப்பற்றினார். மார்னஸ் லபுசேன் 130 ஓட்டங்களுடனும் மெத்திவ் வேட் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.