அரச ஊழியர் நியமனம் தொடர்பிலான பரிந்துரை கையளிப்பு

அரச நிறுவன உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 02-01-2020 | 2:48 PM
Colombo (News 1st) 200 இற்கும் அதிகமான அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அரச தொழில்முயற்சி சபை, சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச வணிக நடவடிக்கைகளுக்குத் தகுந்த நபர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவினாலேயே குறித்த பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சுமார் 300 நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான தேவையுள்ளதாக பரிந்துரைக் குழுவின் உறுப்பினரான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களில் சுமார் 50 நிறுவனங்களை இணைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரச நிறுவனங்களுக்குத் தகுதிவாய்ந்தோரின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, சிரேஷ்ட அதிகாரியான சுமித் அபேசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. சுசந்த ரத்னாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், டொக்டர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.