ராஜித சேனாரத்னவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 27-12-2019 | 5:01 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று அவரை பார்வையிட்டதன் பின்னர் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று பகல 2.10 மணியளவில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டதாக மேலதிக நீதவான் சலனி பெரேராவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்தனர். ராஜித சேனாரத்னவிற்கு பிணை வழங்கும் பட்சத்தில், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 24ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பின்போது டொக்டர் ராஜித சேனாரத்னவுடன் கருத்து தெரிவித்த இருவரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.