கிளிநொச்சியில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்கள் இரத்து

by Staff Writer 26-12-2019 | 5:31 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிப் பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிப் பத்திரங்களையும் இரத்துச் செய்வதற்கு கனியவளத் திணைக்களத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு மாவட்ட செயலகத்திற்கு கூறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாம் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் வினவியபோது, கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலமையைக் கருத்திற்கொண்டு இதனுடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்து 2 மாதங்களுக்கு முன்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மணல் அகழ முடியாது என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.