இராணுவ வீரரிடமிருந்து துப்பாக்கியை திருடியவர் கைது

வவுனியாவில் இராணுவ வீரரிடமிருந்து துப்பாக்கிகளைத் திருடியவர் கைது

by Staff Writer 25-12-2019 | 5:53 PM
Colombo (News 1st) வவுனியா - போகஸ்வெவ இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்த துப்பாக்கி ஒன்றை திருடிச்சென்ற சந்தகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். போகஸ்வெவ காவலரணில் கடமைபுரிந்துவிட்டு மீண்டும் இராணுவ முகாமிற்கு குறித்த சிப்பாய் இன்று (25) அதிகாலை 4.15 மணியளவில் சென்றுள்ளார். தாக்குதல் நடத்திய சந்தேகநபர், இராணுவ சிப்பாயிடமிருந்த T-56 ரக துப்பாக்கியொன்றையும் 2 கைத்துப்பாக்கிகளையும் திருடிச் சென்றுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இராணுவ சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கு அமைய, புலனாய்வுப் பிரிவினரும் இராணுவ பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பிரகாரம் சந்தேகநபர் இன்று பிற்பகல் கெக்கிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருடிச் செல்லப்பட்ட T-56 ரக துப்பாக்கி, கெக்கிராவ பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், போகஸ்வெவ இராணுவ முகாமில் சேவையாற்றி தப்பிச்சென்ற ஒருவர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.