by Staff Writer 24-12-2019 | 3:03 PM
Colombo (News 1st) இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் 3, இருபதுக்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.
விராட் கோஹ்லி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
உபாதைக்குள்ளாகியிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவானும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், விராட் கோலி தலைமையில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சஞ்சு சம்சன், ரிஷப் பந்த், ஷிவம் துபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, பும்ரா, வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டி ஜனவரி 5 ஆம் திகதி குவாஹட்டியிலும் இரண்டாவது போட்டி 7 ஆம் திகதி இந்தூரிலும் 3ஆவது போட்டி 9 ஆம் திகதி புனேயிலும் நடைபெறவுள்ளன.