பாட்டலி குறித்த விசாரணைக்காக பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய அனுமதி

by Staff Writer 23-12-2019 | 7:24 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பிலான விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினாரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம, சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு இதற்கான அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை - இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வாகன விபத்து இடம்பெற்ற காலத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயன்படுத்திய தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கையை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தொலைபேசி நிறுவனங்கள் சிலவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.