நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் கடும் மழை

நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் கடும் மழை

by Staff Writer 22-12-2019 | 7:24 AM
Colombo (News 1st) அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்று (22) 150 முதல் 200 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பல்வேறு இடர்களில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். நிலவும் சீரற்ற வானிலையால் 7,565 குடும்பங்களைச் சேர்ந்த 26,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 11,916 பேர் 90 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பலத்த மழையுடனான வானிலையால் பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், கேகாலை, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 47 வீடுகள் முழுமையாகவும் 1,054 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, அதிக மழையினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரித்தான 43 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வான்பாய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 84 வீதமாக காணப்படுவதாக நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார். இங்கினிமிடிய, தப்போவ, இராஜாங்கனை, நுவரவெவ, மஹகனதராவ, நாச்சதுவ, தெதுருஓயா, லுணுகம்வெஹர, பராக்கிரம ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர, யான் ஓயா, அங்கமுவ, வெஹெரகல, ரம்பகென்ஓய, மஹதிவுல்வெவ, உன்னிச்சை, சொரபொர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவிற்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது. வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் சில பிரதான வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. வீதிகளில் சரிந்து வீழ்ந்துள்ள மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. நுவரெலியா - இராகலை வீதியின் வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் சரிந்து வீழ்ந்த கற்பாறைகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர குறிப்பிட்டுள்ளார். பதுளையின் பல வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தவிர அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலு பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.