அடுத்த மாதம் முதல் அரைசொகுசு பஸ் சேவை இரத்து

அடுத்த மாதம் முதல் அரைசொகுசு பஸ் சேவை இரத்து

by Staff Writer 21-12-2019 | 2:58 PM
Colombo (News 1st) அரைசொகுசு பஸ் சேவை அடுத்தமாதமளவில் இரத்து செய்யப்படும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அரைசொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்பட்டதன் பின்னர் அதற்கு பயன்படுத்தப்பட்ட பஸ்களை, குறைந்த கட்டணத்தில் அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடுத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தூர இடங்களிலிருந்து அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோருக்கான போக்குவரத்து வசதிகளை குறித்த பஸ்களூடாக மேற்கொள்ள முடியுமா எனவும் ஆராயுமாறு போக்குவரத்து அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.