கடும் மழையுடனான வானிலையால் அதிகமானோர் பாதிப்பு

கடும் மழையுடனான வானிலையால் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 20-12-2019 | 5:39 PM
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையினால் 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை, மொனராகலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 859 குடும்பங்களைச் சேர்ந்த 2788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையினால் பாதிக்கப்பட்ட 2033 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. ஹெட ஓயாவின் நீர்மட்டம் சியம்பலாண்டுவ பகுதியில் அதிகரிக்கும் அபாயம் நிலவுகின்றது. இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு சொந்தமான 35 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார். அதிக மழை காரணமாக மஹவெலி கங்கையின் வெரங்கதொட்ட மற்றும் மனப்பிட்டிய பகுதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 வீதி நீரில் மூழ்கியுள்ளதால் நாவுல, ஹொதெல்ல பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையினால் பதுளை, பசறை பிபில - லுனுகல வீதி பிற்பகல் 5 மணி முதல் நாளை (21) காலை 6 மணிவரை மூடப்படவுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.