மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை கோரல்

பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை கோரல்

by Staff Writer 19-12-2019 | 4:35 PM
Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அமைச்சரான மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக சேவையாளர்கள் பெருமளவானோர் எவ்வித சேவையும் இன்றி இருந்த போதும், அவர்களுக்கு பாரிய அளவில் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை பிரிவிற்கு போதுமான அளவு ஊழியர்கள் இருக்கின்ற போது, முறையற்ற முகாமைத்துவத்தினால் அரசிற்கு கிடைக்க வேண்டிய பாரிய அளவிலான நிதி கிடைக்கவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கு மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.