டெல்லியில் இணையத்தள சேவைகள் தற்காலிகமாக முடக்கம்

டெல்லியில் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனை தற்காலிகமாக முடக்கம்

by Bella Dalima 19-12-2019 | 6:20 PM
Colombo (News 1st) டெல்லியில் பதற்றம் நிறைந்த இடங்களில் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியின் சீலாம்பூர் மற்றும் பிரிஜ்புரி ஆகிய இடங்களில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. அரச அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம், சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று டெல்லி செங்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை , குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் எதிர்வரும் 23 ஆம் திகதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் பேரணி நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், பாரிய பேரணிகளை முன்னெடுக்க கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.