கொழும்பு - கண்டி வீதியில் ஒழுங்கை மூடப்படுகிறது

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ஒழுங்கை ஒன்று மூடப்படுகிறது

by Staff Writer 19-12-2019 | 3:48 PM
Colombo (News 1st) கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கொழும்பு நோக்கி வாகனங்கள் பயணிக்கும் இரு ஒழுங்கைகளில் ஒர் ஒழுங்கை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி இணையும் பாலத்தின் ஒரு பகுதியில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று முதல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை குறித்த ஒழுங்கை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் கடவத்தை முதல் கொழும்பு வரை பயணிக்கும் கனரக வாகனங்கள், கடவத்தை நுழைவாயில் ஊடாக கெரவலப்பிட்டி வரை பயணித்து, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடயில் வலது பக்கமாக பயணித்து, புத்தளம் வீதியூடாக நவலோக்க சுற்றுவட்டம் வரை சென்று ஜப்பான் நட்பு பாலத்தினூடாக கொழும்பு துறைமுகத்தை சென்றடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர சுகததாச விளையாட்டரங்கு வரை சென்று கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு கோட்டை வரை பயணிக்க முடியும். அதிவேக வீதியை பயன்படுத்த முடியாத அனைத்து வாகனங்களும் மஹர, கிரிபத்கொட ஆகிய பகுதிகளூடாக வத்தளைக்கு சென்று கொழும்பு - புத்தளம் வீதியின் ஜப்பான் நட்பு பாலத்தினூடாக கொழும்பை சென்றடைய முடியும் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களிலிருந்து கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள், களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகள் ஊடாக கொழும்பை சென்றடையுமாறு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.