குற்றப்பிரேரணை வாக்கெடுப்பில் ட்ரம்ப் தோல்வி

குற்றப்பிரேரணை வாக்கெடுப்பில் ட்ரம்ப் தோல்வி

by Bella Dalima 19-12-2019 | 3:36 PM
Colombo (News 1st) தமக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக 230 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதிகள் சபையில் குற்றப்பிரேரணையை வெற்றிகொள்ள வேண்டுமாயின் 216 வாக்குகளை பெறுவது அவசியமாகும். இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி பதவியில் ட்ரம்ப் நீடிப்பாரா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் செனட் சபையின் விசாரணைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன. தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்தமை ட்ரம்புக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்படுவதற்கான முக்கிய காரணியாகும். மக்கள் பிரதிநிதிகள் சபையின் குற்றப்பிரேரணையை எதிர்நோக்கியுள்ள மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.