அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 19-12-2019 | 4:00 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைகளுக்கு விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதனைத் தவிர அரிசி விநியோக நிலையங்களிலுள்ள கையிருப்பினை பரிசோதித்து, நாளாந்தம் அவற்றை விநியோகிப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வாழ்க்கை செலவினை குறைப்பதற்காகவும் விநியோக நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் VAT மற்றும் தேச நிர்மாண வரி குறைக்கப்பட்டது. எனினும், குறித்த பொருட்களின் விலைகள் எதிர்பார்க்கப்பட்ட அளவு குறைக்கப்படவில்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பொருட்களை விநியோகம் செய்யும் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, புதிய திட்டங்களின் பிரதிபலனை நுகர்வோர் அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.