by Staff Writer 18-12-2019 | 4:14 PM
Colombo (News 1st) வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான திட்டத்தை ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தேச திட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெற்றது.
சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கான தகைமைகளை பூர்த்தி செய்தும் அது கிடைக்காத குடும்பங்களில் மேலதிக கல்வியைத் தொடர முடியாதுள்ள பிள்ளைகளுக்காக பலநோக்கு அபிவிருத்தி செயலணியின் கீழ் இந்த தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து தலா 300 தொடக்கம் 350 பேர் வரை இந்த செயலணிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இவர்கள் பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களில் அடிப்படை கல்வித் தகைமை தேவைப்படாத வெற்றிடங்களுக்கு பயிற்சிகளின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.