நீர்கொழும்பிலிருந்து கடலுக்குச் சென்ற படகு மாயம்

நீர்கொழும்பிலிருந்து ஐவருடன் கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல் போயுள்ளது

by Staff Writer 17-12-2019 | 12:59 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 மீனவர்களுடன் கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளது. கடந்த 30 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற 'கவீஷா துவ' எனப்படும் நீண்டநாள் மீன்பிடி படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் குறித்த மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்தினம் படகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாலைதீவுக்கு அருகில் குறித்த மீன்பிடிப் படகு காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மசிறி திசேரா குறிப்பிட்டுள்ளார். கடற்படை மற்றும் வௌிவிவகார அமைச்சு ஊடாக குறித்த மீனவர்கள் தொடர்பில் வௌிநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.