கைதிகளிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

சிறைச்சாலை கைதிகளிடமிருந்து 800 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

by Staff Writer 17-12-2019 | 11:32 AM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளிடமிருந்து சுமார் 800 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் மெகசின் சிறைச்சாலையிலேயே அதிகமான கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதனைத் தவிர, களுத்துறை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்ட சில சிறைச்சாலைகளில் அநேகமான கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அவ்வாறான சட்டவிரோத பொருட்களைப் பொறுப்பேற்பதற்கு போதுமான வசதிகள் தம்வசம் இல்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தொடர்ந்தும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை, சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஊடாகவே நாட்டிற்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறான கடத்தல்காரர்கள் 10 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகத்திற்குரிய கைதிகள், ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கே அதிகளவில் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.