களனியூடாக கொழும்பிற்குள் நுழைவதில் இடையூறு

களனி பாலத்தினூடாக கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கான ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டது

by Staff Writer 17-12-2019 | 7:13 AM
Colombo (News 1st) களனி பாலத்தினூடாக கண்டியிலிருந்து கொழும்பிற்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் இரு ஒழுங்கைகளில் ஓர் ஒழுங்கையில் இன்று (17) காலை 6 மணி முதல் தற்காலிகமாக வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நிர்மாணப் பணிகளின் நிமித்தம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் வாகன போக்குவரத்துத் திட்டத்தின் ஒத்திகையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை மற்றும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஒத்திகையின் பின்னர் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை கண்டியிலிருந்து கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கான இரு ஒழுங்கைகளில் ஓர் ஒழுங்கை தற்காலிகமாக மூடப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட நுழைவாயிலினூடாக, இலகுரக வாகனம் மற்றும் பஸ்களுக்கு மாத்திரம் கொழும்பிற்கு பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொள்கலன் மற்றும் லொறிகள், மாற்று வீதியாக கொழும்பு நீர்கொழும்பு வீதியை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அறிவுறுத்தல்களுக்கு அமைய மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.