காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 16-12-2019 | 8:15 PM
Colombo (News 1st) நாள்தோறும் யானைத் தாக்கத்தினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 48 மணித்தியாலயங்களில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வில்பத்து தேசிய சரணாயலத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மகாவிலச்சிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹெலம்ப வெவ கிராமத்தில் வாழும் மக்கள் தினந்தோறும் யானை பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே 4 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடையவர் சேனையிலிருந்தபோது யானை தாக்கி உயிரிழந்துள்ளார். ஹெலம்ப வெவ கிராமத்தைச் சுற்றி யானை வேலி அமைக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறியும் யானைகள் கிராமத்திற்குள் நுழைவதாக மக்கள் கூறுகின்றனர். இதேவேளை, மாத்தளை - ரத்கம பகுதியில் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி மதுஷான் விக்ரமசிங்கவின் பூதவுடல் இன்று பிற்பகல் ரத்தோட்டை - கயிகாவல , கும்புல்ஒலுவ பகுதியில் உள்ள அவரின் வீடடிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.