குடியுரிமை மசோதாவால் அசாமில் வன்முறைகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அசாமில் தொடரும் வன்முறைகள்

by Bella Dalima 12-12-2019 | 4:33 PM
Colombo (News 1st) இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அசாமில் நிலைமை மோசமாகி வருகிறது. அசாமின் பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் போராட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெளஹாத்தி உள்ளிட்ட பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அசாமில் உள்ள டின்சுகியாவில் உள்ள பனிடோலா ரயில் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அசாமின் திப்ரூகார் நகரத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சர்பானந்த சொனோவல் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை எறிந்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நேற்று (11) மத்திய அரசு நிறைவேற்றியது. இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அசாமை பூர்வீகமாகக் கொண்டவர்கள் எதிர்ப்பதற்கு வேறுபட்ட காரணங்கள் உள்ளன. 1971-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின் போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அசாமை பூர்வீகமாகக் கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் அன்றைய காலம் முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, 1971ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப்பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் நினைத்த நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவானது வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.      

Source: BBC