ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது: ஜனாதிபதி உறுதி

by Staff Writer 12-12-2019 | 6:33 PM
Colombo (News 1st) நாட்டில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்ற வகையில், ஊடகப் பணியில் ஈடுபட்டு, ஊடகங்களின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாட்டின் ஜனாதிபதியாக தன்னை தெரிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் வினைத்திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன அவற்றில் முக்கியமானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு தனக்கு குறைவின்றி கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.