எதிர்க்கட்சி தலைவரின்றி கூடும் அரசியலமைப்பு பேரவை

எதிர்க்கட்சித் தலைவரின்றி கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

by Staff Writer 11-12-2019 | 4:45 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (12) காலை கூடவுள்ளது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தமூடாக உருவாக்கப்பட்ட 10 பேரைக் கொண்ட அரசியலமைப்பு சபையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலவைர் ஆகியோர் சபைக்கு நேரடியாக நியமிக்கப்படுவார்கள். பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துள்ளதால், அரசியலமைப்பு பேரவையின் நாளைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள முடியும் என பாராளுமன்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அரசியலமைப்பு பேரவையின் நாளைய கூட்டம் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்க்கட்சித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவிற்கு அறிவிக்கப்படவில்லை. இதுவரை பாராளுமன்றம் கூடி உத்தியோகப்பூர்வமாக அவர் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படவில்லை என்பதே அதற்கான காரணமாகும். இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவரின் பங்குபற்றுதல் இன்றியே அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது. இதனைத்தவிர, நாளை கூடவுள்ள அரசியலமைப்பு பேரவையில் கலந்துகொள்ளுமாறு, இதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.