சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் வவுனியா மாணவர் விபத்தில் பலி

by Staff Writer 10-12-2019 | 9:36 PM
Colombo (News 1st) இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இன்று வவுனியாவில் பதிவானது. வவுனியா - ஆசிக்குளம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுகிறார். இன்று பரீட்சை எழுதுவதற்கு செல்லும் முன்னர் காலை 6.45 அளவில் தனது நண்பருடன் கந்தக்குளத்தில் இருந்து ஆட்சிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது, வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் இவர்கள் நேருக்கு நேர் மோதியுள்ளனர். ஆசிக்குளம் வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதான புண்ணியகுமார் பகிரதன் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த அவரது நண்பர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.