சர்வதேச மனித உரிமைகள் தினம்: வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 10-12-2019 | 8:42 PM
Colombo (News 1st) சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. "மனித உரிமைகளுக்காக இளைஞர்களை வலுப்படுத்தல்" என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படுகிறது. சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முல்லைத்தீவிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சூசையப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி, மாவட்ட செயலகம் வரை பயணித்தது. மாவட்ட செயலகத்திற்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிப்பதற்கான மகஜரொன்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை தினமான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று அக்கரைப்பற்றில் கவனயீர்ப்பு பேரணியொன்று நடத்தப்பட்டது. அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பாதிப்புற்றோர் பெண்கள் அரங்கத்திலிருந்து ஆரம்பமான பேரணி, அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரம் வரை பயணித்து.