மரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

மரண தண்டனையை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

by Staff Writer 09-12-2019 | 2:45 PM
Colombo (News 1st) மரண தண்டனை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நீடிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான எஸ். துரைராஜா, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவும் உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்துள்ளது.