இந்திய தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ - 43 பேர் பலி

இந்திய தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ - 43 பேர் உயிரிழந்தனர்

by Fazlullah Mubarak 08-12-2019 | 9:18 PM
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லியில் ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5. 22 மணியளவில் திடீரென தீ பரவியது. இதனால் குறித்த பகுதியில் சூழ்ந்த புகை மண்டலத்தினால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயில் சிக்கிய 59 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மின்ஒழுக்கு காரணமாக காரணமாக தீ பரவியிருக்கலாம் என டெல்லி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படுமெகன மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாரதீய ஜனதா கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 05 இலட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.