தெற்காசிய விளையாட்டு விழா: மெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கப்பதக்கங்கள்

by Staff Writer 07-12-2019 | 9:14 PM
Colombo (News 1st) நேபாளத்தில் நடைபெறும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கை வீரர்கள் 6 தங்கப்பதக்கங்களை இன்று சுவீகரித்தனர். 1991 ஆம் ஆண்டின் பின்னர் மெய்வல்லுநர் போட்டிகளில் 15 தங்கப்பதக்கங்களை இலங்கை வீரர்கள் வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான மரதனோட்டத்தில் ஹிருனி விஜேரத்ன தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் மகளிர் மரதனோட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கை வீராங்கனையாக ஹிருனி பதிவானார். ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 50 செக்கன்ட்களில் தூரத்தைக் கடந்து ஹிந்துனில் ​ஹேரத் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடங்கள் 6.18 செக்கன்ட்களில் தூரத்தைக் கடந்து டில்ஷி குமாரசிங்க தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் கயந்திகா அபேரத்தின வெண்கலம் வென்று ஆறுதலளித்தார். மகளிருக்கான ஈட்டி எறிதலில் நதீஷா தில்ஹானி தங்கப்பதக்கமும் நதீகா லக்மாலி வெண்கலமும் வென்றனர். ஆடவர், மகளிர் 400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கை குழாத்தினர் தங்கப்பதக்கங்களை சுவீகரித்தனர்.