பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: நால்வர் கொலை

பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்கொலை

by Staff Writer 06-12-2019 | 3:38 PM
Colombo (News 1st) ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்ற போது ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு எரியூட்டி கொலை செய்யப்பட்டார். திட்டமிட்ட வகையில் இடம்பெற்ற இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்த பெண்ணை எரித்த சம்பவம் நேற்று (05) பதிவானது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான குறித்த பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சென்ற பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளிகளால் உயிரோடு எரியூட்டப்பட்டுள்ளார். 80 வீத தீக்காயங்களுக்குட்பட்ட பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.