ஜனாதிபதியின் அணியை சேர்ந்தவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்தவர் கைது

by Staff Writer 04-12-2019 | 9:09 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அணியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அணியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, கொலை செய்வதற்கு தயாரானமை மற்றும் அதற்காக தூண்டுதல் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 27 வயதான சந்தேகநபர் மட்டக்களப்பு - ஓட்டமாவடி, மீராவோடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவருடன் கட்டுநாயக்க பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் தங்கியிருந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் குற்றச்செயலுடன் தொடர்புபடாமை உறுதியானதும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.