வலப்பனை கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து

by Staff Writer 04-12-2019 | 3:51 PM
Colombo (News 1st) வலப்பனை - மல்லப்பட்டாவ பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மீண்டும் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவிலேயே, கற்குவாரிக்கு மீண்டும் அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர், பொறியியலாளர் சஜ்ஜன டி சில்வா தெரிவித்தார். இதேவேளை, மல்லப்பட்டாவ பகுதியிலுள்ள கற்குவாரிக்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமற்போன சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தேடுதல் பணிகளில் 30-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து குறிப்பிட்டார். நிலச்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.