நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

by Staff Writer 01-12-2019 | 7:50 PM

இந்தியாவிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவுசெய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​நேற்றிரவு நாடு திரும்பினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முதலாவது வௌிநாட்டு விஜயத்தினை நிறைவுசெய்து நேற்றிரவு 9.45 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியிருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 196 விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விஜயத்தின்போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுட்டார். இதன்போது சலுகை கடன் அடிப்படையில் 400 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய பிரதமர் தீர்மானித்தார். பயங்கரவதத்தை ஒழிப்பதற்கு மேலும் 50 மில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாகவும் இந்தியா அறிவித்தது. அத்துடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது. அத்துடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட சிரேஸ்ட இராஜதந்திரிகளையும் சந்தித்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். மகாபோதி சங்கத்தின் தலைவர் , சாஞ்சி விகாரையின் விகாரதிபதி பானகல உபதிஸ்ஸ ​தேரரரையும் நேற்று பிற்பகல் ஜனாதிபதி சந்தித்தார். சாஞ்சி விகாரரையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கை பக்தர்களுக்காக விகாரையில் வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை சிங்கள மொழியில் வழங்குவது தொடர்பில் இதன்போது தேரர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.