by Staff Writer 30-11-2019 | 4:09 PM
Colombo (News 1st) ஹங்வெல்ல - அம்புல்கம உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்புகளில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொலை, கப்பம் பெறுதல், மணல் வர்த்தகம் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கொட லொக்கா மற்றும் மற்றும் ஊரு பூஜா உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் ஆதரவாளர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல, அம்புல்கம மற்றும் ஜல்தர உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மத்தியில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரொஹான் துசித்த குமாரசிங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த வாள், கேரளக்கஞ்சா மற்றும் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.