by Staff Writer 30-11-2019 | 9:04 PM
Colombo (News 1st) சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் ஊழியரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆழமாகவும் பக்கசார்பின்றியும் விசாரணை நடத்துமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அச்சத்தைப் போக்குவதற்கும் காரணமாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பொதுமக்களின் ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு பாரிய அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த இளம் பெண்ணுக்கு நீதியை நிலைநாட்டுவது மாத்திரமல்லாது, ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்கும் வகையிலானது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.