சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்

சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்: நித்யா மேனன்

by Bella Dalima 30-11-2019 | 6:05 PM
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் நித்யா மேனன், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்ததாகக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சித்தார்த்துடன் இணைந்து 180 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி என்ற படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு எடையைக் குறைத்துள்ளார். நித்யா மேனன் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். இதன்போது,
ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. நான் விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வந்தேன். ஆனால், எனது பெற்றோரின் ஆசையால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன். இப்பொழுது எனக்கு சினிமாவை மிகவும் பிடித்துள்ளது. எனக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள பந்தம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. திருமணத்திற்கு பிறகு காதல் பிறப்பது போன்றது
என நித்யா மேனன் கூறியுள்ளார்.