பாரத பிரதமர், குடியரசு தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி

பாரத பிரதமர், குடியரசுத் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 29-11-2019 | 3:32 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் பிரதமர் மோடியையும் சந்தித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதலாவது வௌிநாட்டு பயணத்தில் ஈடுபட்டு தமது நாட்டிற்கு வருகை தந்த கோட்டாபய ராஜபக்ஸவை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவின் மைல்கல் எனவும் இருநாட்டு நட்பை நீடிப்பதற்கும் பலமடையச் செய்வதற்கும் உறுதுணையாக அமையும் எனவும் பாராத பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அந்நாட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். இந்திய இராணுவத்தினரால் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த வரவேற்பு நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் ஈடுபட்டிருந்தார்.