பதவி விலகல் தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 29-11-2019 | 3:43 PM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் இந்த கோரிக்கை தொடர்பில் பதிலளித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலகாது, தமது பதவிக்காலத்தை முழுமையாக பயன்படுத்தி சேவையாற்றுவது சிறந்தது என சபாநாயகர் கூறியுள்ளார். விசேடமாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையிலான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலூடாக அடையாளங்காணப்பட்ட முக்கிய மறுசீரமைப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தீர்மானமிகு தேர்தல் ஆகியவற்றை சிப்பாக வழிநடத்துவதற்கு மஹிந்த தேசப்பிரியவின் தலைமைத்துவம் அவசியம் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.